Saturday 1 October 2016

சிலுவையினால் ஒப்புரவு …

பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார். – (எபேசியர் 2:16).

கம்யூனிச தேசங்களுக்கும் அமெரிக்க தேசத்திற்குமிடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. அமெரிக்க தேசத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் ருமேனியா தேசத்தில் வெளியரங்கமாய் சுவிசேஷம் அறிவிக்கத்தடை இருந்தும் இரகசியமாய் சில ஊழியங்கள் செய்யும்படி சென்றிருந்தார். ஒருநாள், கடும் குளிரிலே ஆள் நடமாட்டம் அதிகமில்லாத தெரு ஒன்றில் சென்று கொண்டிருந்தார். மக்கள் யாவரும் யாரையும் கண்டு கொள்ளாமல் அவரவர் தங்கள் வேலையாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு மனிதனின் விசில் சத்தம் அவரை ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி, திடுக்கிட செய்தது. ஏனெனில் அவர் ‘மா பரிகாரியான இயேசு’ என்ற பாமாலை பாடலை விசில் அடித்தபடி அந்த மனிதன் சென்று கொண்டிருநதார்.
கிறிஸ்துவை மறுதலிக்கும் தேசத்தில் இப்படி ஒரு நபரா என மகிழ்ச்சியடைந்து, அம்மனிதனுக்கு பின்பாக இவ்வூழியரும் பின் தொடர்ந்தார். யாரும் பார்த்து விட்டால் பிரச்சனை வரலாம் என்பதால் சிறுது தூரம் அமைதியாய் சென்ற அவர், பின் அந்த பாட்டை இவரும் விசில் அடிக்க ஆரம்பித்தார். அந்த பாட்டைக் கேட்டவுடன் அந்த ருமேனியர் பிரகாசமுள்ள முகத்தோடு திரும்பி வந்து, ஊழியரை கட்டிப்பிடித்து கொண்டு தனது தாய் மொழியில் ஏதோதோ சொல்ல ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் தனது மொழி அவருக்கு புரியவில்லை என்பதை அறிந்து தனது இருதயத்தின் மேல் கைகளை வைத்தார். பின் கைகளை வானத்திற்கு நேராய் உயர்த்தினார். சிலுவை அடையாளத்தை வரைந்து காண்பித்தார். கட்டுக்கடங்காத மகிழ்ச்சியோடு மொழி, கலாச்சாரம், அரசியல் பின்னணி என ஏதோதோ வித்தியாசத்தில் வாழும் ஒருவருக்கொருவர் சம்மந்தமில்லா அவ்விருவரும் ஒரு சில நிமிடத்தில் இணைக்கப்பட்டனர். காரணம் என்ன? கிறிஸ்துவின் இரட்சிப்பின் சந்தோஷமே!
நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் இரண்டு பெரிய பிளவுகள் சரிசெய்யப்பட்டன.
1. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையேயிருந்த பெரிய இடைவெளியை இணைக்கும் பாலமானார்.
2. உலகிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இடையேயுள்ள இடைவெளியையும் சரிபடுத்தினார்.
எப்படியெனில், மனிதனால் சராசரியாய் மற்றொருவரை நேசிப்பது கடினமான காரியம். மனிதன் மற்றவரிடத்தில் முகரீதியாக சிரித்து பேசினாலும், மற்றவருக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளால் இருவரின் இருதயத்திற்கும் இடையில் பெரிய இடைவெளி உண்டு. அதை கிறிஸ்து, ‘பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்’ என்ற வசனத்தின்படி ஒப்புரவாக்குகிறார்.
ஒரு மனிதன் தன் சொந்த குடும்பத்தையே முழுமனதோடு நேசிப்பதில் குறைவுபடும்போது சிலுவை எப்படி சம்பந்தமில்லாத இரு வேறு மனிதர்களை இணைத்தது பார்த்தீர்களா? வேதமில்லாத உலகத்தின் சில கொள்கைகள் மக்களை ஓரளவிற்கு இணைக்கக்கூடும். ஆனால் இரு வேறு மனிதர்களின் இருதயங்களை அன்பினால் இணைக்க தேவனால் மட்டுமே முடியும். சிலுவையினால் மிகப்பெரிய பாவியும் கிறிஸ்து அவனுடைய பாவத்தை மன்னிக்கிறதால், தேவனோடு ஒப்புவாகும்படி செய்கிறார். மாத்திரமல்ல மற்ற கிறிஸ்தவர்களோடு ஒரே சரீரமாக இணையும்படி செய்கிறார். முன்பு கிறிஸ்துவுக்கு எதிர்த்து நின்ற சவுல், கிறிஸ்துவின் தரிசனத்திற்கு பிறகு பவுலாக மாறி, கிறிஸ்துவின் அப்போஸ்தலராக மாறின விந்தை கிறிஸ்துவின் சிலுவை அன்பினால் மாத்திரமே முடிந்தது. அல்லேலூயா!
சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாறிடுவேன்
சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்
ஜெபம் :
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் உமக்கென்று ஒப்புரவாக்கினீரே உமக்கு ஸ்தோத்திரம். எந்த வேறுபாடுள்ள இரண்டு மனிதரையும் அன்பினாலே ஒருமனப்படுத்தும் சிலுவையின் அன்புக்காக உமக்கு ஸ்தோத்திரம். அந்த நேச குடும்பத்தில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரையும் அங்கத்தினராக வைத்ததற்காக உமக்கு கோடா கோடி நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment